ஆய்வு விளக்கம்
இறைவனின் விந்தைப் படைப்புகளுள் ஒன்றான மனித இனத்தின் மனமாகிய அகவுலகம் முழுமையாக ஆராயவோ, வெளிப்படுத்தவோ இயலாதது. அது தன்முன் விரிந்துள்ள உலக வாழ்க்கையிலிருந்து எண்ணற்ற பொருட்களையும், செய்திகளையும் திரட்டி, சிந்தனை ஆற்றலினால் உருப்படுத்தி, வெளியிட முயல்கிறது. இத்தகைய முயற்சிகளின் வெளிப்பாடுகளாகவே கலைகள் அமைந்திருக்கின்றன. இவ்வெளிப்பாடுகளின் எல்லை இன்பமாக ஆடலும் பாடலும் சுவைபட இணைவதில் உருவாகும் நாடகக்கலை, ஏனைய கலைகளைவிடச் சிறந்து விளங்குகின்றது.
புராணங்கள், இதிகாசங்களில் கூறப்பட்ட கதைகள் எல்லாம் சமூகத்தில் சடங்குகளுக்கு உட்படுத்தப்பட்டு நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகளாக மேற்கொள்ளப்பட்டன. வழிபாட்டின் போது நம்பிக்கைக்குரிய கதையம்சங்களின் நிகழ்வுகள் கற்பனைகளாக வாழ்நிலை அனுபவங்களுடன் சடங்குகளாக மாறின. இவை இசை, உடல் மொழி, ஆடுவெளி இவைகளோ இணைந்து நிகழ்த்து வடிவங்களாயின. நாளடைவில் இவை சடங்காகவும் மகிழ்நெறி வடிவமாகவும் தனித்தனியாக வளர்ந்தன. இவ்வடிவங்கள் செய்கையோ, ஆற்றுகையோ நிகழ்த்துகின்ற தளம் காட்சிக்குரிய இடமாகிறது. காட்சிக்குரிய அந்த குறிப்பிட்ட செயலைத்தான் நாடகம் என்பர்.
தமிழ் நாடகம் காலந்தோறும் மாற்றங்களுக்குட்பட்டு வந்திருக்கிறது. இம்மாற்றங்களில் ஒன்று ஓரங்க நாடகம். புதிய நாடக வடிவமாக உள்ள ஓரங்க நாடகத்தைச் சிறுகதையுடன் ஒப்பிடலாம். சிறுகதைக்கு வரலாறும் இலக்கணமும் இருப்பது போல் இதற்கும் வரலாறும் இலக்கணமும் சொல்லப்பட வேண்டும். இவ்வாய்வு அந்த வகையில் அமைந்துள்ளது.
ஓரங்க நாடகங்களை விளக்கமுறை மற்றும் சமூகவியல் அணுகுமுறை, ஒப்பீட்டு அணுகுமுறை என்ற வகையில் அணுகியுள்ளது.
இவ்வாய்வேடு, முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டது.
அவை,
1. ஓரங்க நாடகத்தின் வரலாறும் வளர்ச்சியும்
2. ஓரங்க நாடகத்தின் அமைப்பு
3. ஓரங்க நாடகத்தின் உள்ளடக்கம்
4. ஊடகங்களில் ஓரங்க நாடகம் (வானொலி, தொலைக்காட்சி)
5. நவீன நாடக இயக்கத்தில் ஓரங்க நாடகம்
என்பனவாகும்.
மனித வாழ்க்கையில் கலைகள் இரண்டு விதங்களில் பயன்படுகின்றன. ஒன்று மனத்திற்கு அறிவூட்டுவது. மற்றொன்று மனத்தை மகிழச் செய்வது நாடகக்கலையும் இவ்விரு நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. நாடகம் என்பது நாட்டின் அகமான மக்களைப் பற்றிப்பேசுவது. மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றிப்பேசுவது. அதனால்தான் இது மக்கள் கலை என்று சொல்லப்படுகிறது.
கூத்தும் நாடகமும் வெ வ் வேறானது என்பதைப் பெருங்கதை குறிப்பிடுகின்றது. இருப்பினும் பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுவதாகும். அதனடிப்படையில் குதித்து ஆடும் கூத்து, வளர்ச்சி நிலையை எட்டியபோது நாடகமாக வளர்ச்சிபெற்றுள்ளது.
நாடக நிகழ்த்துதல் என்ற முறை தனிப்பட்ட குழுவையோ, அமைப்பையோ சார்ந்த நிலையில் இருந்து மாறித் தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வுகளோடு கலந்தது. வழிபாட்டு விழாகாலங்களில் இரவு நிகழ்ச்சியாக நாடகம் நிகழ்த்தும் முறை வழக்கத்திலிருந்து வந்தது. இதனால் தொழில் முறைக்குழுக்கள் உருவாகின. தொழில் முறைக் குழுக்களின் போட்டியால் நாடக வடிவத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனடிப்படையில் பாலர் நாடக சபைகளும், பயின்முறை நாடகக் குழுக்களும் உருவாகித் தமிழ் நாடகத்தைப் பலப்படுத்தின. நடைமுறை எதார்த்தக் கதைகள், நடுத்தர மக்களின் வாழ்வியல் சிக்கல்கள் போன்றவை நாடகக் கருக்காளயின. இசை நாடகக் கூறுகளையும், திரைப்படத் தாக்கத்தினையும் பெற்று ஸ்பெஷல் நாடகங்கள் இயங்கின.