ஆய்வு விளக்கம்
சங்க இலக்கியத்தில் களவுக் கைகோள் பற்றிய இவ்வாய்வு முனைவர் பட்டத்திற்கு மேற்கொள்ளப் பெற்றுள்ளது.
இவ்வாய்வு பகுப்பாய்வு, ஒப்பீட்டாய்வு அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
சங்க இலக்கியத்தில் அமைந்த களவுக் கோட்பாடுகளை வரையறுப்பதும் உரையாசிரியர்களில் சார்பின்றித் தொல்காப்பிய மூலத்தை ஆய்ந்து தொல்காப்பியரின் களவுக் கோட்பாட்டையும் உரையாசிரியர்களின் உரைகளை மட்டும் நோக்கி அவர்களது களவுக் கோட்பாடுகளையும் வரையறுப்பதும், அவற்றைச் ச.கி. களவியற்கோட்பாடோடு ஒப்பிட்டு இவை தனித்தனியே அவரவர் கால சமூக சமயக் கோட்பாட்டினடிப்படையில் வேறுபட்டு இலக்கியக் கோட்பாட்டளவில் தனித்து விளங்குகின்றன என்பதை ஒப்பீட்டு முறையில் மதிப்பீடுதலும் இவ்வாய்வின் கருதுகோளாகும்.
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அவை,
1. தொல்காப்பியரின் களவியற்கோட்பாடுகள்
2. உரையாசிரியர்களின் கவியற் கோட்பாடுகள்
3. சங்க இலக்கியத்தின் களவியற் கோட்பாடுகள்
4. சங்க இலக்கியத்தின் களவியற்கோட்பாடுகளும் தொல்காப்பியர் உரையாசிரியர்களின் களவியற் கோட்பாடுகளும்.
என்பனவாகும்.
களவு என்ற கலைச்சொல் பல பொருளில் தமிழிலும், தொல் திராவிடத்திலும் வழங்கினாலும் அது கற்புக்கு முற்பட்ட வாழ்வைக் குறிக்கும் கலைச் சொல்லாகத் தமிழில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு முன் ச.இ. இல் அது கலைச் சொல்லாகவும் குன்று சொல்லாகவும் ‘குன்றுபயன்’ என்ற இலக்கியத் திணைக் கோட்பாடு நிலையிலும் தகுதி பெற்றதோடு பரணர், மாமூலனார் உலோச்சுனார் போன்ற புலவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சங்க இலக்கியத்திற்கு இலக்கணம் தொல்காப்பியம் என்ற நோக்கில் நச். இன், உரை உருவாக்கக் கோட்பாடு அமைந்துள்ளது. மேலும் இவர் தொல், களவு நிகழ்வுகளைக் கோவைபோல வரிசையாகக் கூறாது பெருநிகழ்வுகளை மட்டும் குறித்துச் செல்கிறார் என்ற தொல்காப்பிய நூலாக்கம் பற்றிய நோக்கிலும் இவரது உரை உருவாக்கக் கோட்பாடு அமைந்துள்ளது.